Sunday, September 14, 2008

மாரத்தான் வியாபாரத்தில் மாணவன் கொலை!

சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று மாரத்தான் போட்டியை 'கிவ் லைப்' என்ற அமைப்பு நடத்தியது. கலைஞரின் தற்போதைய டெல்லி வாரிசு கனிமொழி மற்றும் சூர்யா, மாதவன் என நடிகர்களின் படங்களை போட்டும் நகர் முழுவதும் பிரம்மாண்டமாக விளம்பரம் இப்போட்டிக்காக செய்யப்பட்டு இருந்தது. ஏழை குழந்தைகளுக்கு 'கல்வி கொடுப்பதற்காக' என அறிவித்து "ஓடுவதற்கு" பதிவு கட்டணமாக ரூ 100ம், "ஸ்பான்சர்" என பலரிடம் நன்கொடையும் ஆக மொத்தத்தில், இவ்வியாபாரத்தில் கோடிக்கணக்கில் நிதி திரட்டப்பட்டது.

போட்டியன்று ஆற்காடு வீராச்சாமி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கில், கனிமொழி உள்பட பல நடிகர்கள் கொடியசைக்க சுமார் 1.5 லட்சம் பேர் போட்டியில் பங்கேற்றனர். ஆனால் போட்டிக்கு விளம்பரம் செய்தளவில் சிறிதளவு கூட போட்டியில் பங்கேற்க வந்தவர்களின் மருத்துவ உதவிக்கு மருத்துவர்களோ, மருந்து மற்றும் தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் பலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். அதில் அண்ணா பல்கலை கழக எம்.எஸ்.சி மாணவன் சந்தோஷ் (22) மிகவும் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணமடைந்தார்.

ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கப் போவதாக பீற்றிக்கொண்டு இப்போட்டியை நடத்தியவர்கள் தான் கல்வியினை வியாபாரப்பொருளாக மாற்றியவர்கள். இறந்த அந்த மாணவனை அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம், ஆனால் அந்த மருத்துவமனை தனியாருடையவை. அதற்கு பணம் செலுத்துவது யார்?

இப்படி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கிய அயோக்கியர்கள் தான் போட்டிக்கு கொடியசைத்தவர்கள். இதனை மக்கள் உணரும் நேரத்தில் இன்று கொடியசைத்தவர்கள் ஓடிக்கொண்டு இருப்பார்கள்.

No comments:

இணைப்பு