Tuesday, October 28, 2008

பெட்ரோல் டீசல் விலை உயர்வு :மக்களின் மரணத்தின் மீதே இந்திய அரசின் கொடி ஏற்றப்படுகிறது!

50 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல் விற்றபோது அரசின் வருமானம் ரூ 25 க்கும் மேல். அதாவது ஆண்டுக்கு 1.25 லட்சம் கோடி. பின்னர் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 147 டாலர் விலையேற்றத்தை காரணம் காட்டி உடனே விலையினை உயர்த்திய இந்திய அரசு, அதே பேரல் தற்போது 68 டாலருக்கு குறைவாக இறங்கி உள்ளபோது விலையினை குறைக்க மறுக்கிறது.
..
இந்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வருமானம் என்பது இவ்வாறு மக்களிடம் இருந்து வரியாக பிடுங்குவதும், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதும் மூலம் மட்டுமே பெறப்படுகிறது.
..
அப்படி பெற்று போடும் பட்ஜெட் யாருக்காக செலவு செய்யப்படுகிறது.
முழுக்க முழுக்க பன்னாட்டு கம்பெனிகள் - தரகு முதலாளிகளின் தேவைக்கான பாலங்கள், சாலைகள் போன்ற உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்கவும், தெற்காசிய ரவுடியாக தான் மாறுவதற்காக ஆயுத தளவாடங்கள் வாங்கி குவிப்பதற்குமே.
..
இந்த உள்நாட்டு கட்டமைப்பை தான் போட்டி போட்டு கலைஞர், இந்து மதபயங்கரவாதி மோடி, போலி புத்ததேவ் போன்ற மறுகாலனியாக்க அடிமைகள் செய்து வருகின்றன. இந்த ஆயுத தளவாடங்கள் தான் ஈழத்தில் தமிழர்களை கொல்வதற்கு சிங்கள பேரினவாத அரசுக்கு வழங்கப்படுகிறது.

Wednesday, October 22, 2008

பிஞ்சென்றும் பாராது இலாபவெறி

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ நிறுவனம். இந்திய மருத்துவத்தின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதையும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்குவதையும் இலட்சியமாகக் கொண்டு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனம். இந்த நிறுவனம்தான், பன்னாட்டு நிறுவனங்கள் தரும் டாலருக்காக பிஞ்சுக் குழந்தைகள் மீது, புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகளை நடத்தி, இதுவரை 49 குழந்தைகளைக் கொன்றுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கேட்டிருந்த தகவல் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 4,142 குழந்தைகள் மீது, அதிலும் பெரும்பான்மையாக (2,728) ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் மீது இந்த நிறுவனம் சோதனைகளைச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சோதனைகளின் போது 49 குழந்தைகள் இறந்துள்ளன.

கடந்த 30 மாதங்களில் 42 வகையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள், வெளிநாடுகளில் தயாரான 5 மருந்துகள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டச் சோதனை செய்யப்பட்டுள்ளன. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், இறந்த குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரிய வந்துள்ளன. ஆனால், புதிய மருந்துகளால் ஏற்பட்டுள்ள பக்கவிளைவுகள் பற்றியோ, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பற்றியோ எவ்விதத் தகவலும் இல்லை. இது பற்றிய தகவல் தங்களிடம் இல்லை என்று எய்ம்ஸ் நிறுவனம் கூறிவிட்டது. அதாவது, மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சிறிது காலம் வரை மட்டுமே அந்த குழந்தைகளின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டுள்ளது. பின்பு அவற்றின் கதி என்னவென்றே தெரியவில்லை.



இந்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு, குழந்தைகளின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கியே இந்தச் சோதனைகளைச் செய்வதாக இவர்கள் கூறுகின்றனர். ஆனால், மருத்துவ வசதிகோரி எய்ம்ஸ் நிறுவனத்திற்கு வருபவர்களில் பெரும்பான்மையினர் ஏழை எளிய மக்கள்; படிப்பறிவில்லாதவர்கள். இவர்களது குழந்தைகள் மீதுதான் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தங்களது குழந்தையின் மீது இப்படி ஒரு சோதனை நடத்தப்படுகிறது என்பதும், இதனால் தங்களின் குழந்தைகளின் உயிருக்கே கூட ஆபத்து உண்டாகும் என்பதும், அவர்களுக்குப் பெரும்பாலும் தெரியாது. குழந்தைக்கு நோய் குணமாக ஏதோ புதிய மருந்தை மருத்துவர் இலவசமாகத் தரப்போகிறார் என்றே பலரும் நினைத்தனர். அதன்படியே, மருத்துவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்தும் போட்டுள்ளனர்.



இந்தச் சோதனையில் குழந்தை இறந்தாலோ, அல்லது பக்க விளைவுகளுக்கு உள்ளானாலோ முறையான இழப்பீடும் கிடையாது. இது போன்ற சோதனைகள் தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் மட்டுமல்ல; நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.



திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட புற்று நோய்க்கான புதிய மருத்துவ ஆராய்ச்சி முதல் ஆந்திராவில் பில் கேட்சின் உதவியுடன் செயல்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் (ஹெப்படைடிஸ் பி) தடுப்பூசி சோதனை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பல வகையான புதிய மருந்துகள் இந்திய மக்களின் உடலில் செலுத்தப்பட்டு சோதிக்கப்படுகின்றன.



அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றில், மனிதர்கள் மீது மருத்துவச் சோதனைகள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட சில மேலை நாடுகளில் கூட சட்டதிட்டங்கள் கறாராக இருப்பதாலும், ஆய்வுக்கான செலவும் மிக அதிகமாய் இருப்பதாலும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளைக் குறிவைத்துள்ளன. இதற்காக ஆகும் செலவில் 10 சதவீதத்திலேயே இந்தியாவில் சோதனையைச் செய்துவிட முடியும்.



பன்னாட்டு மருந்து நிறுவனங்களான நோவோ நார்டிஸ்க், அவென்டிஸ், நோவார்டிஸ், கிலாக்ஸோ ஸ்மித் கிலைன் மற்றும் ஃபைசர் ஆகியன தங்களது மருந்துச் சோதனைக் கூடங்களைப் பல இந்திய நகரங்களில் நிறுவி வருகின்றன. 2010ஆம் ஆண்டுக்குள் 20 இலட்சம் இந்தியர்களின் மீது புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.



கடந்த ஆண்டு முதல் இத்தகைய ஆய்வுகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் மருந்துச் சோதனை வழியாக 20 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய செலாவணி வந்து குவிந்துள்ளதாகக் கணக்கு காட்டும் நிதித்துறை, 2010ஆம் ஆண்டுக்குள் இதனை 50 கோடி டாலராக உயர்த்தப் போவதாகக் கூறுகிறது.



இதை வேறு வார்த்தைகளில் சொன்னால், சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்தப்படும் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது என்பதுதான்!

· செல்வம்

புதிய ஜனநாயகம் October

Monday, October 20, 2008

பிஞ்சுகளைக் குதறும் வெறியர்கள்.. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.



· தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.


· போலியோவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் முகம் திடீரென்று வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர் அச்சிறுமியிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தபோது பக்கத்து வீட்டு இளைஞன் அச்சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.


· தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது ரம்யாவை பலவந்தமாகத் தூக்கிச் சென்ற எதிர்வீட்டின் 45 வயதான சீனிவாசன் பலாத்காரம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.


· கேக் தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் பயிற்சிக்காக வந்த கேட்டரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர், அங்கு விளையாட வரும் ஐந்து வயதுச் சிறுமியை தங்களது இச்சைக்குப் பல நாட்களாகப் பயன்படுத்திய விவரம் தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்தது அச்சிறுமியின் குடும்பம்.


· சென்னை மெட்ரிகுலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கழிப்பறையில் வைத்து ஓராண்டாகப் பாலியல் வன்முறை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதே ஆசிரியரால் குதறப்பட்ட வேறு இரண்டு மாணவிகளும் புகார் கொடுத்தனர்.


· நாகையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை 45 வயது ஆசிரியர் ஆய்வகத்தில் வைத்து பாலியல் வன்முறை செய்ததில் அம்மாணவி கருத்தரித்தாள்.


· மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறை செய்தது பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் தெரியவந்தது. இதற்குத் தண்டனையாக அவ்வாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
· ஈரோடு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏழு வயது மாணவியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை பள்ளியில் இதே போன்று வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டாள்.


···


முதல் சம்பவம் சென்ற மாதத்தில் நடந்தது. பின்னையவை சமீப காலங்களில் நடந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் இத்தகைய சம்பவங்கள் எங்கோ மேலை நாடுகளில் மட்டும் நடக்கும் வக்கிரம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மதிப்பீட்டை இவை மறுதலிக்கின்றன. பல்வேறு ஆய்வுகளும் புள்ளி விவரங்களும் இதையே வழிமொழிகின்றன.


பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.


இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.


இறைந்து கிடக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தவிர்க்க முடியாத அங்கமாகியிருப்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பு சிதைந்துவரும் மேலைநாடுகள் போலல்லாமல் இந்தியப் பண்பாட்டிற்கு அச்சாணியாகக் குடும்பங்கள் வலுவாக இருப்பதாக நம்பும் பழமைவிரும்பிகள் கூட இந்த உண்மையை அங்கீகரித்துதான் ஆக வேண்டும்.


செல்பேசிகளும், இருசக்கர வாகனங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல. பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது. பொருளாதாரத்தில் நாட்டின் முன்னேற்றமும், விவசாயிகளின் தற்கொலையும் ஒருங்கே நிகழ்வது போல பண்பாட்டில், குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன.


பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும், மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் "மானாட மயிலாட' நடனமும் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன. பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் "தொடர்'களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.


பார்த்து இரசிக்க வேண்டிய குழந்தைகளைப் பிய்த்துக் குதறும் காமவெறி இன்றைக்குத்தான் தோன்றியது என்று கூற முடியாது. இதன் அடிவேர் பார்ப்பனியத்தின் மூடுண்ட சமூகத்தில் இருக்கின்றது. சாதியத்தைத் தனது ஆன்மாவாக வரித்திருக்கும் சமூகம், ஆண் பெண் உறவையும் சீனப் பெருஞ்சுவரால் பிரித்திருக்கின்றது. சக மனிதனுடனேயே சாதிபார்த்து பழகும்போது காமத்திற்கு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவதாசிகளையும், கோபுரங்களில் விதவிதமான கலவிச் சிற்பங்களையும் பார்வைக்கு வைத்திருக்கும் பண்டைய பாரதம், காமசூத்ராவை உலகிற்கு அளித்த பார்ப்பனியம், மேட்டுக்குடியினர் பாலியல் ருசிகளை அனுபவிப்பதற்கு மட்டும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.


இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால், பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. பாலுணர்வு எனும் இயற்கையான உணர்வு திருட்டுத்தனமான விசயமாகப் பார்க்கப்படுகின்றது. நடுத்தர வயதை எட்டிவிட்டால், காமத்தைக் குற்றமாகக் கருதி மறைத்துக் கொள்ளும் போலித்தனமும், காதலில் சுதந்திரமாக இணைவதற்கு சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குறுக்கு வழிகளை நோக்கி மனத்தைத் தூண்டுகின்றன.


மணவாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான நேசம் பல காரணங்களால் குறையத் தொடங்கும்போது, சலிக்கத் தொடங்கும்போது, அவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து யாரும் சீர்செய்து கொள்வதில்லை. பிரிவு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை.
இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மணவாழ்வில் கிடைக்காத இன்பத்தை, குறிப்பாக ஆண்கள் (சில சமயங்களில் பெண்களும்) மணவாழ்விற்கு வெளியே தேடுகின்றார்கள். இவையெதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை நிறைவேறுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்கள் அதற்கு உதவுகின்றன. கள்ள உறவின் தோற்றுவாய் இப்படித்தான் இருக்கின்றது.


இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுவோர் திருட்டுத்தனத்தில் மட்டுமே சுதந்திரத்தைக் காண்கிறார்கள். இவர்களுடைய வாழ்வின் மற்ற வேலைகளை முதலில் மெதுவாகவும், பின்னர் வெகுவேகமாகவும் அரிக்கும் கரையானாகக் காமம் மாறிவிடுகின்றது. சிந்தனையின் மையத்தையே கைப்பற்றிவிடும் இந்த வெறி மற்றெல்லாச் சிந்தனைகளையும் தடுமாற வைக்கின்றது. சமூக வாழ்க்கையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டிய மனிதனை நைந்துபோக வைக்கின்றது. காதலைத் துறந்து காமத்தை மட்டும் ஒரு விலங்குணர்ச்சி போல துய்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் விபச்சாரமும் கூட இத்தகைய நபர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதில்லை.


அதனால்தான் கலவியில் புதிது என்ன? என்ற கேள்வி அடுத்து வருகின்றது. அந்தக்கால மன்னர்களும், ஜமீன்தார்களும், இந்தக்கால பணக்காரர்களும், முதலாளிகளும் எல்லையற்ற காமத்தில் திளைத்தாலும் திருப்தி கொள்வதில்லை. பாலுறவுச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் மேலை நாடுகளிலிருந்து கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் இளஞ்சிறுவர்களைத் தேடி வெள்ளையர்கள் வருகிறார்கள்.


விபச்சாரமே குலத்தொழில் என்று விதிக்கப்பட்ட சில ஆந்திரக் கிராமங்களில் புதிதாகப் பருவமெய்தும் சிறுமிகளுக்குப் பொட்டுக்கட்டும் சடங்கும் அவர்களை ஏலமெடுக்கும் முறையும் இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தின் காமக்களியாட்டம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற காலமும் மாறி வருகின்றது.


உலகமயமாக்கத்தால் பெருகியிருக்கும் பணக்கொழுப்பும், இணையத்தால் திறந்துவிடப்பட்டிருக்கும் இன்பவாயில்களும் இன்று பணக்காரப் பெண்களையும் வாடிக்கையாளர்களாக்கி விட்டன. இவர்களுக்குச் சேவை புரியும் ஆண் விபச்சாரிகளும் மாநகரங்களில் பெருத்து வருகின்றார்கள். மொத்தத்தில் உயர் வர்க்கத்தினர் இதற்கேற்ற மனநிலையையும், பணநிலையையும் ஒருங்கே பெற்றிருக்கின்றனர்.


இந்த வசதி இல்லாதவர்களுக்கு விரலுக்கேற்ற விபச்சாரம் இருக்கின்றது. என்றாலும் அதனைத் தேடிப்போவது அத்தனை சுலபமாய் நடப்பதில்லை. இரகசியம் காக்க முடியாத கள்ள உறவுகளோ கொலையில் முடிகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.


இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும், திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள், "இவையெல்லாம் சகஜம்தான் போலும்' என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.


செல்போனில் புழங்கும் நீலப்படங்கள், பாலியல் குற்றங்களையே கவர்ச்சிகரமான அட்டைப்படக் கட்டுரைகளாக்கும் பத்திரிக்கைகள், அவற்றையே தமது கதைக்கருவாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும், எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், தான் இழந்து விட்ட இன்பம் குறித்து உள்ளுக்குள் புழுங்கத் தொடங்குகின்றனர். புதிய அதிருப்தியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.


தனிநபரின் காமம் புடைப்பதற்கேற்ற கலாச்சாரச் சூழலும் மறுபுறம் அதைத் தடை செய்யும் சமூகக் கட்டுப்பாடுகளும் கோலோச்சும் வாழ்க்கையில், என்னதான் இருந்தாலும் எல்லோரும் எல்லை மீறி விடுவதில்லை. அல்லது மனத்தளவில் எல்லை மீறினாலும் செயலில் மீறாத வண்ணம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சமூக விழுமியங்களின் அடிப்படையில் தனது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பலரும் போராடினாலும் இந்தப் போராட்டத்தில் தோல்வியுறுபவர்களும் இருக்கின்றார்கள்.


கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் சேர்ப்பதா, யாரும் பார்க்கவில்லை என்பதால் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் பலருக்கும் வருகின்றது. ஒருமுறை எல்லை மீறிவிட்டால், பிறகு வக்கிரம் இயல்பாக மாறிவிடுகின்றது. கடுகளவு குற்ற உணர்வுகூட இல்லாமல் அடக்கப்பட்ட காமத்தை இவர்கள் வெறியுடன் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குப் பிரச்சினையில்லாத தொல்லையில்லாத இலக்கு குழந்தைகள். வயதுவந்த பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்குவதும், ஒரு சிறுமியை வல்லுறவு செய்வதும் ஒன்றல்ல. பிந்தையதைச் செய்வதற்கு மிகுந்த வன்மம் வேண்டும்.


பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும், கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.


பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது. கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.


சிறுவர்களும், சிறுமிகளும் வயது வந்த எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்ளும் நீலப்படங்கள்தான் இன்றைய சிறப்பாம். இதைப் பார்த்துத்தான் பணக்காரத் தம்பதியினர் கிளர்ச்சி அடைகிறார்களாம். சிறார்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தும் போக்கு உழைக்கும் மக்களிடத்தில் இருப்பதை விட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம்தான் அதிகம் நிலவுகிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் குடும்ப உறவு பண உறவாகவும், பண்ட உறவாகவும் போலித்தனம் நிரம்பியதாகவும் இருப்பதால் இத்தகைய சீரழிவுகள் அதிகம் நடக்கின்றன.


குழந்தைகளை வல்லுறவு கொள்ளும் மனிதர்கள் எவரும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கேடிகளல்ல. அந்தக் குழந்தையின் உறவினராகவோ, அண்டை வீட்டாராகவோ பொதுவாக நன்னடத்தையுடன் வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் இன்னொருபுறம் தமது கைகளுக்கு அருகாமையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை அவை அறியாவண்ணம் குதறுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். தனது நன்னடத்தையைக் காப்பாற்றிவரும் அதே வேளையில் காம வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு இரகசியமான கருவிகளாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.


ஒரு குழந்தையின் குழந்தைத் தன்மையை இரக்கமின்றி நசுக்கும் இந்தக் கயவர்கள் எவரும் மனநோயாளிகள் அல்ல. பிடிபடாத வரை இந்த வக்கிரத்தைத் தொடரலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். குழந்தைகளை வல்லுறவு செய்தல் ஒரு விபத்து போலவும் நடப்பதில்லை. அனைத்தும் திட்டமிட்டுதான் நடக்கின்றன.


ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான். அந்த வகையில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்த அபாயத்தை சந்திக்கும் நிலையில்தான் இருக்கின்றார்கள். பருவம் வராத குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுதல், நீலப்படங்களைக் காண்பித்து உணர்வூட்டுதல் போன்றவற்றையும் இந்தக் கயவர்கள் செய்கின்றார்கள். உடலும், வயதும் முதிர்ந்த பின்னர் அறிய வேண்டிய பாலுறவை முன்பே அறிந்து கொண்டு அதற்கு பலியாகின்றார்கள் இந்தக் குழந்தைகள்.


விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு இது வன்முறையாக நடக்கின்றது. பெற்றோர் அக்கறையோ கண்காணிப்போ இல்லாமல் இணையத்தில் மூழ்கும் மாணவர்களோ பிஞ்சிலே வெம்பி விடுகின்றார்கள். தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும் சிறுவர்களைப் பாலியலுக்கு அறிமுகம் செய்கின்றன.


பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமி, தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அகமகிழ்கின்றார்கள் பெற்றோர்கள். அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.


பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் குழந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சியைப் பெறும்போது பெரும் மனவியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். தனக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டதாகவும், தனது புனிதம் கெட்டுப்போனதாகவும், தான் கோழையென்றும், இன்னும் பலவிதமாகவும் அவர்கள் கருதிக் கொள்வதால், இத்தகைய குழந்தைகளை சிகிச்சை அளித்து மீளப்பெறுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.


ஆசிரியர்கள் இழைக்கும் கொடுமைகளால் மாணவிகள் அடையும் மனச்சிதைவுக்கு எல்லையில்லை. எதிர்கால வாழ்வை விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் மனத் துணிவை இவர்கள் இழக்கிறார்கள். விசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கப்படுவதால் அது உள்ளுக்குள்ளேயே மனதை ரணமாக்குகின்றது.


பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு பல ஆலோசனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளின் மறைவுறுப்புக்களை யாரும் தொட அனுமதியாத வண்ணம் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளுடன் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவது, அவர்களையும் அப்படிப் பேசவைப்பது, விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, விளையாடும் குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் என்று பல ஆலோசனைகள் பேசப்படுகின்றன.


இவற்றையெல்லாம் செய்யலாம்தான். இவை தடுப்பு மருந்து மட்டுமே. நோயின் மூலத்தை அறிந்து அழிக்கும் சக்தி இந்த மருந்திடம் இல்லை. ஆம், குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் கயவர்களைத் திருத்துவதற்கு எந்த மருந்தும் அரசிடமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. சொல்லப்போனால் இந்த நோயை முற்றச்செய்யும் வேலையைத்தான் உலகமயமாக்கத்தின் பண்பாடு செய்து வருகின்றது. இயற்கையான காமம் செயற்கையாக உப்பவைக்கப்படும் இன்றைய சூழலில் இவை ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான காரியம்.


முக்கியமாக இந்த மனவிகாரம் உள்ளவர்கள் என எல்லோரையும் சொல்ல முடியாதுதான். அதே சமயம் இந்தக் கொடுமையைச் செய்யப் போகிறவர்கள் யார் என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. அது அந்தக் குழந்தையின் மாமாவாகவோ, சித்தப்பாவாகவோ, ஆசிரியனாகவோ, அண்டை வீட்டு இளைஞனாகவோ இருக்கலாம்.


நான்கு சுவர்களுக்குள் நமது குடும்பத்தின் நலனை மட்டும் பேணிக் கொள்ளலாம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தெருவில் இறங்காமலா இருந்துவிட முடியும்? ஒழுக்கக் கேட்டையும் வக்கிரத்தையும் தோற்றுவிக்கும் சமூகச் சூழலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டும்தான் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். அந்தக் கிருமிகளிடமிருந்து நம்மையே தற்காத்துக் கொள்ளவும் முடியும்.


· இளநம்பி

புதிய கலாச்சாரம் October

Tuesday, October 14, 2008

நூல் அறிமுகம் : இளமையின் கீதம்

சீனப் புரட்சியின் முக்கியமான கால கட்டத்தில், தங்களது தலைவிதியை தேசத்தின் தலைவிதியோடு இணைத்துக் கொண்டு போராடிய சீன இளைஞர்களின் கதை இது. 1931 முதல் 35 வரையிலான கொந்தளிப்பான இச்சூழலில்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வலது மற்றும் இடது திசை விலகல்களுக்கெதிராக தன்னைப் புனரமைக்க பெருமுயற்சி செய்து வந்தது. இந்தப் பிண்ணனியில், வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் புடம் போடப்படுவதற்கு முன்வந்த சீன இளைஞர்களின் வரலாற்றுச் சித்திரமே இந்நாவல்.



1931 இல் சீனாவின் வடகிழக்கு மாநிலங்களை ஜப்பான் ஆக்கிரமித்தது. அப்போது சீனாவை ஆண்டு கொண்டிருந்த சியாங்கே ஷேக் எனும் பிற்போக்கு ஆட்சியாளன், ஜப்பானுடனான போரில் தோல்வியடைந்து பின்வாங்கினான். தேசத்தைச் சூழ்ந்திருந்த இவ்விரண்டு அபாயங்களையும் எதிர்த்து, தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் போராடினார்கள். இதன் முத்தாய்ப்பாக, கம்யூனிஸ்ட் கட்சி 1935 டிசம்பர் 16இல் பீகிங் நகரத்தில் மாபெரும் அரசியல் எழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அரசியல் அரங்கிலும், கட்சியின் தளத்திலும், தனி மனிதர்களுக்குள்ளேயும் நடந்த போராட்டங்களின் உயிர்த் துடிப்பான பதிவே இந்நாவல். இப்போராட்டங்களினூடாக, மனித குலம் இதுவரை கண்டும், கேட்டும் இராத, உயர்ந்த, பண்பட்ட வார்ப்புகளாக பல கம்யூனிஸ்ட்டுகள் உருவானதன் இரத்தமும், தசையுமான வரலாறு இது.



கதையின் நாயகர்கள் எவரும், "பிறவி நாயகர்கள்' அல்ல; காலத்தை எதிர்கொண்ட விதத்தினாலேயே நாயகர்களாக மாறியவர்கள்; புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு கண்ணியாக தங்களை நிலைநிறுத்தியதன் மூலம், நாயகர்களாக உயர்த்தப்பட்டவர்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிமுகமாகும் நிலப்பிரபுத்துவ பின்னணி, சிறு முதலாளியப் பின்னணி, அறிவு ஜீவிகள், ஆலைத் தொழிலாளிகள், கூலி விவசாயிகள், சிறு உடமையாளர்கள் போன்ற பல வர்க்கத்தினரும், பாட்டாளி வர்க்கமாக பட்டை தீட்டப் பட, சமூக நடைமுறை வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதில் அவர்களது தடுமாற்றம்; அதனைக் களைவதற்கான போராட்டம்; போராட்டத்தில் வெற்றி, தோல்வி; மீண்டும் போராடுவது ... என இவர்களது அரசியல் போராட்ட வாழ்க்கை நீள்கிறது; வழிதவறிப் போனவர்களும் இதில் உண்டு.



கார்க்கியின் "தாய்' நாவல், ஒரு அரசியலற்ற தாயின் சமூக அக்கறையினூடாக, அவள் அரசியல்படுத்தப்படுவதை விளக்குகிறது. யாங்மோவின் "இளமையின் கீதமோ', ஒரு பிற்போக்கு நிலவுடமைச் சமூகத்தின், ஆசை நாயகி ஒருத்தியின் மகளான டாவோசிங்கின் எளிய தேசப்பற்று, அவளைக் கம்யூனிஸ்ட் கட்சி தோழராக மாற்றிய வரலாற்றுக் கட்டத்தையே விளக்குகிறது எனலாம்.



கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பித்து, கிராமப்புற பள்ளி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள் டாவோசிங். ஒரு நிலப்பிரபுவிற்கு ஆசை நாயகியாக அவளை மாற்றத் துடிக்கும் உறவினர்களை எதிர்த்துக் கொண்டு, அவளைக் காதலிக்கிறான் பல்கலைக் கழக மாணவனான யூ யூங்சே. அவனுடன் நகரத்திற்கு வந்த பிறகு, ஒரு புத்தாண்டு விருந்தில் அவளுக்கு கம்யூனிச அறிமுகம் கிடைக்கிறது. லூ சியாசுவான் என்ற தோழர் அவளுக்கு கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.



அதன் பிறகு கட்சிக்காக ஆசிரியராகிறாள்; கிராமங்களுக்கு செல்கிறாள்; உளவாளியாகச் செயல்படுகிறாள்; அடக்குமுறைக் காலங்களில் அஞ்சாமல் வேலை செய்கிறாள்; கைதாகி சிறைப்படுகிறாள்; இறுதியில் டிசம்பர் 16 ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டுகிறாள். ஒரு எளிமையான கிராமத்துப் பெண் படிப்படியாக போராளியாக மாற்றப்படுவதன் தருணங்களை நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. கூடவே பல தோழர்களின் உயிர்த்துடிப்பான வாழ்க்கைகளையும் அறிகிறோம்.



கோமிண்டாங் போலீசிடம் பிடிபட்ட லூ சியாசுவான், தன் மீதான சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு, பிற தோழர்களுக்கு ஆபத்து எனத் தெரிந்தவுடன் துடித்துப் போய், கட்சிக்கு தகவல் அனுப்ப முயல்கிறார். அவர் மடிந்தாலும், தோழர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். லீவெய் என்ற தோழர், உற்சாகத்துடன் விளையாடச் செல்லும் விளையாட்டு வீரனைப் போல மற்றவர்களிடம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, கைகுலுக்கி விட்டு, தூக்குமேடைக்குச் செல்கிறார்.



புரட்சிகர இயக்கமோ கம்யூனிசமோ, பலருக்கு இது போன்ற பரவசமூட்டும் தருணங்களில்தான் அறிமுகமாகிறது. இந்நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் சிலர். பலருக்கு இத்தியாகம், நம்பிக்கையூட்டி கிளர்ச்சியூட்டுகிறது. வாசகர்களுக்கு இந்த எழுச்சி உணர்வு தொடர்ந்து இருக்க வேண்டுமானால், அவர்கள் தம்மை கதாபாத்திரமாக மாற்ற வேண்டியுள்ளது. அதாவது புரட்சிகர நடைமுறையில் இறங்க வேண்டியுள்ளது.



புதிய ஜனநாயகப் புரட்சிதான் தீர்வு என்பதை ஏற்றுக் கொண்டாலும், இன்றைய சமூக அமைப்பு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தான்மட்டும் தப்பித்துக் கொள்ளலாம், எனக் கருதுபவர்கள் இன்று மட்டுமல்ல, அன்றைய சீனத்திலும் இருந்தார்கள். நடுத்தர வர்க்கத்தின் இத்தகைய சிந்தனைக்கு நாவலில் வகை மாதிரியாக வருபவன் சூநிங். இந்த அநீதியான பறிக்கப்பட்ட வாய்ப்புக்களை உதறிவிட்டு கம்யூனிஸ்ட்டாக மாறுபவர்களுக்கு எடுத்துக்காட்டாக அவனது நண்பனான லோ டாஃபாங்கைக் கூறலாம்.



தாயின் பாசம், காதல், படிப்பு ஆகியவற்றுக்காக செஞ்சேனைக்கு செல்லும் தனது முடிவிலிருந்து பின் வாங்குகிறார் சூநிங். அவனது நண்பனும், கட்சித் தோழனுமான லோ டாஃபாங், ஒரு நிலப்பிரபுவின் மகன்; அவனது தந்தை நான்கிங் நகரத்தில் அரச பதவிக்கு வர இருக்கிறார்; இந்நிலையில் கட்சி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறது. மற்றவர்களை அணிதிரட்டும் சூநிங், தான் மட்டும் கலந்து கொள்ளாமல் நழுவுகிறான். தலைமறைவாக இருக்க வேண்டிய லோ டாஃபாங் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பெண் தோழர்களைக் காப்பதற்காகக் களத்தில் இறங்கிச் சண்டையிடுகிறான். பின்பு வட கிழக்குப் போர்முனைக்கும் விரைகிறான். இருவரும் நண்பர்கள்தான் என்றாலும், நடைமுறையில் தோழர்களாக செயல்படுவதில் வேறுபடுகிறார்கள்.



நடைமுறை வேலைகளில் தோய்த்துப் பார்க்காத எவரும் எவ்வளவுதான் மார்க்சிய லெனினியத்தைக் கற்றுத் தேர்ந்தாலும் அற்பக் காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகத்தான் நேரிடும். அவர்கள் கோடிக்கணக்கான மக்களின் விடுதலையைத் தீர்மானிக்க உதவும் சித்தாந்தத்தை, தமது சுயநலனுக்காக கைவிடுவார்கள். அவர்கள் தலைவர்களாக அமையும் போது, தமது தவறையே ஒரு சித்தாந்தமாக நியாயப்படுத்துகின்றனர். மேல் கமிட்டி தோழராக வரும் தய் யூ அன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சாகசவாதத்தை முன்வைத்த லிலிசான் பிரிவைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர். ஆரம்பத்தில் சாகசவாதத்தை கிளர்ச்சியூட்டும் முறையில் பேசுபவர், இறுதியில் எதிரியின் உபசரிப்பில் மயங்கி கட்சிக்குத் துரோகமிழைக்கிறார். ஒரே மூச்சில் புரட்சி, இல்லையேல் வீழ்ச்சி என்று இரு கடைக் கோடிகளுக்கும் செல்லும் இவர்களைத்தான், இடது சந்தர்ப்பவாதிகள் என்று லெனின் அழைக்கிறார்.



முப்பதுகளில் சில மாதங்களே தலைமையில் இருந்த லிலிசான் சாகசப் பிரிவைப் பரிசீலித்து, விமர்சிக்கத் தவறியதால், கோமிண்டாங் அரசு கட்டவிழ்த்து விட்ட வெள்ளைப் பயங்கரவாதத்திற்கு கட்சி ஆட்பட நேர்ந்தது. இதனால் "நெடும் பயணம்' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்ட இடப்பெயர்வின் மூலம், கட்சி தனது மிச்சமிருக்கும் உறுப்பினர்களைக் காப்பாற்றியது. நெடும் பயணத்தின் மத்தியில் 1935 ஜனவரியில் நடந்த சுன்யீ மாநாட்டில் கட்சி தனது தவறான பாதை குறித்து சுயவிமரிசனம் செய்து கொண்டது. பல இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியே தன்னை சுயவிமரிசனம் செய்து கொள்ளும் போது, தனிப்பட்ட அறிவாளிகளோ தன்னை முன்னிறுத்தி தவறுகளை சுயவிமரிசனம் செய்ய மறுக்கின்றனர். முன்னாள் தோழரும் நடிகையாக மாறியவருமான பய் லீபிங் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.



""கம்யூனிசம்கிறது கெட்ட விஷயமில்ல; தத்துவ ரீதியா அது ரொம்ப தெளிவில்லாதது; வெற்றியோ ரொம்ப தூரத்தில் இருக்குது... அது தவிர நீ கைது செய்யப்படலாம்; உன்னோட தலை துண்டிக்கப்படலாம்கிற அபாயத்துல எப்பவும் இருக்க! இதிலிருந்து தப்பிக்க ஒனக்கு ஓரளவு அதிர்ஷ்டம் இருந்தாலும், கடுமையான ஒழுக்கத்தோட இருக்கணும்; நிபந்தனையில்லாம தலைமைக்குக் கட்டுப்படணும்; அதனாலதான் நான் அதிலிருந்தெல்லாம் வெளியேறிட்டேன்'' என டாவோசிங்கிடம் "அறிவுரை' கூறுவாள் பய் லீபிங். காரியவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் என்று பல்வேறு பெயர்களில் இருக்கும் தனது சொந்த வாழ்க்கை சுயநலங்களைப் புனிதப்படுத்துவதற்கு, முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் வைக்கும் இவ்வுலகளாவிய வாதத்தை தமிழகத்தின் பல அறிவு ஜீவிகளிடமும் காண்கிறோம். சுயநலத்திற்கு தேசப் பிரிவினை ஏது?



பய் லீபிங் மீதான காதல்தான் சூநிங்கை செஞ்சேனைக்கு செல்வதிலிருந்து விலக வைத்தது. அன்று மாலையே கோமிண்டாங் இராணுவம் அவனைக் கைது செய்துவிடும். சிறை வாழ்வும், அங்கு கண்டறிந்த தோழர்களின் அர்ப்பணிப்பும், தியாக உணர்வும் அவனைத் தோழராகப் பட்டை தீட்டுகிறது. சுயநலம் மிகுந்த பய் லீபிங்கின் அழகை விட, அனைவருக்கும் விடுதலையைத் தரப்போகும் கம்யூனிசத்தின் அழகு, அவனை செஞ்சேனையில் கொண்டு சேர்ப்பதற்குக் காரணமாக அமைகிறது.


நிலப்பிரபுக்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் யூ யூங்சேவை முதலில் காதலிக்கிறாள் டாவோசிங். இந்த முதல் செயலுக்கு மேல், அவனது முற்போக்கு முடிந்து விடுகிறது. கட்சியில் சேர்ந்து தோழராக வேலை செய்யும் டாவோசிங்கை முதலில் நாசூக்காகவும், பின்பு நேரடியாகவும் கண்டிக்கிறான் யூ யூங்சே. இதற்கு மேல் இங்கு காதலுக்கு இடமில்லை என்பதால், அவனை விட்டு விலகுகிறாள் டாவோசிங். இதே போல தய்யூ ஒரு துரோகி எனத் தெரிந்தவுடன் அவனுடனான காதலைத் துறக்கிறாள் டாவோசிங்கின் தோழியான சியாவோயென்.



இப்படித்தான் கம்யூனிஸ்டுகளின் காதலில் சமூக உணர்வு மட்டுமே அளவு கோலாகிறது. வேறெந்த சித்தாந்தங்களை வைத்திருப்பவர்கள் எவரும், இப்படிக் குடும்ப வாழ்வில் முரண்படுவதில்லை. தோழர்கள் மட்டும்தான், தனது சமூக விழுமியங்களை குடும்பத்திலும் கொண்டு வரப் போராடுகிறார்கள். அதனால் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் "மகிழ்ச்சியான' குடும்ப வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் ஊரையும் வீட்டையும் திருத்தும் இத்தகைய போராட்டங்களில்தான், அவர்களது உண்மையான மகிழ்ச்சி வெளிப்படுகிறது.



தனது மனைவி டாவோசிங் தோழராக மாறியதால், தனது குடும்பத்தின் இன்பம் மறைந்து விட்டதாக யூ யூங்சே, தனது நண்பனான லூ சியாசுவான் எனும் கட்சித் தோழருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை: ""சில கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததன் மூலம் என் மனைவியின் மனதை நீ ரொம்பவும் கெடுத்து விட்டிருப்பதை நான் காண்கிறேன். அவள் உனது ஆணைப்படியே செயல்படுகிறாள். எப்போது பார்த்தாலும் ""புரட்சி'', ""போராட்டம்'' என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறாள். மிக மோசமான முறையில் எங்கள் குடும்ப மகிழ்ச்சி மறைந்து விட்டது. நீ உன் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்றாலும் எனது துன்பத்தில் நீ இன்பம் காண்பதும், எனது அவலத்தில் நீ உனது வாய்ப்பை வளர்த்துக் கொள்வதும் எவ்வளவு வருந்தத்தக்கது.... ஒவ்வொருவருக்கும் ஒரு நீதிநெறி இருக்க வேண்டும்....''.



யூ யூங்சேயைப் பிரிந்து தோழராக வேலை செய்யும் டாவோ சிங்கிற்கு லூ சியாசுவானின் தோழமையுடன் கூடிய ஆளுமை, ஒரு மெல்லிய காதலைத் தோற்றுவிக்கிறது. மரணத்திற்கு முந்தைய சிறைக் கொட்டடியில் இருக்கும் லூ சியாசுவான், டாவோசிங்கிற்கு கடிதம் எழுதுகிறார். ""கடந்த ஆண்டுகளில் கொடுஞ்சிறையில் இருந்த போது உலகின் மிக முன்னேறிய வர்க்கத்தின் போராளியாக நீ மாறிவிடுவாய் என்று நான் முன்னோக்கிப் பார்த்தேன். புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்களில் ஒருவராகவும் இருப்பாய் தோழரே. வெற்றியின் நேரத்தை விரைவுபடுத்துவதற்காக, ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்டுகள் இரத்தம் சிந்துகிறார்கள்; உயிர்த்தியாகம் செய்கிறார்கள். .... அன்புத் தோழரே, அன்பு டாவோசிங், எனது முறை விரைவிலே வரக்கூடும்...''



இரண்டு கடிதங்களுக்குமிடையில்தான் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தில் எவ்வளவு வேறுபாடுகள்! தேசத்தின் விடுதலைக்கான முயற்சியால் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சி மறைந்து விட்டது என்று புலம்புகிறது ஒரு கடிதம். இன்னொரு கடிதமோ தான் கொல்லப்பட்டாலும் தன் காதலி போராட்டத்தை தொடர்ந்து செய்யவேண்டும் என்று கம்பீரமாக விரும்புகிறது. மக்களது விடுதலை என்ற எதிர்காலக் கனவுக்காக, நிகழ்காலத்தின் துயரங்களை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகள், மனித வாழ்க்கையின் முழுமையைத் தங்களது வாழ்க்கையில் அடைகிறார்கள்.



""இருளைவிட ஒளி வலிமையானது; அற்ப குணத்தை விட பெருந்தன்மை வலுவானது; சுயநலத்தை பொதுநலமும், துயரத்தை மகிழ்ச்சியும் வெற்றி கொள்ள வேண்டும். உண்மையான மனிதனாக நாம் வாழவேண்டும். இதையே நான் எனது எழுத்தில் வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்'', எனத் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாவலாசிரியர் யாங் மோ. ஆம், முற்போக்கு, மக்கள் நலன், சமூக அக்கறை, மாற்றம், புரட்சி எனப் பேசுபவர்களைத் தொட்டுத் துரத்தும் முதற்புள்ளி இதுதான். அதுதான் இந்நாவலின் எளிய மாந்தர்களைக்கூட மாபெரும் நிகழ்வுகளைச் சாதிக்கும் போராளிகளாக மாற்றியிருக்கிறது.



தனிநபர்களின் வழியாகவோ அல்லது எந்திரகதியிலான விவரங்கள் அடிப்படையிலோ வரலாற்றை படிக்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். நாவலோ ஒரு உயிர்த்துடிப்பான வரலாற்றுப் பின்னணியில், பல்வேறு வர்க்கப் பின்னணியிலிருந்தும் வரும் மனிதர்களை வைத்து, மனித வாழ்க்கையின் மாறத்துடிக்கும் போராட்டத்தின் காட்சியை ஒரு மாபெரும் ஓவியமாக தீட்டுகிறது.



இந்த ஓவியத்தில் மூழ்கி எழும்போது நாவலின் பாத்திரங்கள் கடந்த காலத்திற்கு மாத்திரம் உரியவர்கள் அல்ல, நிகழ் காலத்தில் நம்மிடையேயும், நமக்குள்ளேயும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது தெரிய வருகிறது. 748 பக்கங்களில் விரியும் நாவலைப் படித்து முடித்ததும், நாமும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து வேலை செய்ய மாட்டோமா என்ற ஆவலும் புதிய வாசகருக்கு நிச்சயம் எழும். தோழர்களுக்கோ புரட்சியின் உரைகல்லில் நாம் எங்கு, யாராக, என்னவாக நிற்கிறோம் என்ற நிலைக்கண்ணாடி போல நாவல் காட்டிவிடும்.



"புரட்சி சரியானது; மக்களை அணிதிரட்டவேண்டும்; நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஒழிக்கப் போராட வேண்டும். ஆனால், எனது பிரச்சினை தனியானது. நான் மட்டும் பிழைத்துக் கொள்வேன்; எனது மகிழ்ச்சி இப்போதே கிடைக்கும்; மக்களுக்கோ புரட்சிக்குப் பிறகுதான்' எனக் கருதுவதற்கான வாய்ப்பை அன்றைய சீனத்திலும், இன்றைய இந்தியாவிலும் ரத்து செய்கிறது நாவல்.


·வசந்தன்
புதிய கலாச்சாரம்
இணைப்பு